Sunday, December 28, 2008

இந்தியா விடுதலையான செய்தியை முதலில் அறிவித்த குரலுக்கு சொந்தக்காரரான நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் காலமானார். அவருக்கு வயது 87.சினிமாவுக்கு வரும்முன் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். இளைஞராக இருந்தபோது பூர்ணம் என்ற பெயரில் நாடக கம்பெனியை நடத்தியதால் அவரது பெயருடன் பூர்ணம் ஒட்டிக்கொண்டது.எழுபதுகளில் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கியவர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பலருடனும் நடித்துள்ளார்.





ஐம்பது வருடங்களுக்கும் மேலாக பூர்ணம் விசுவநாதனுடனான நட்பு நீடித்தது. நட்பு என்றால் தினமும் ஒருதடவை நேரிலோ அல்லது போனிலோ ‘என்னையா, சௌக்கியமா?’ என்று குசலம் விசாரிக்கும் சினேகிதமல்ல. வருடத்திற்கொரு முறை சந்தித்துக்கொண்டாலும், முகமும் கண்களும் மலர, அவருக்கே சொந்தமான அந்தச் சிரிப்புடன், ‘என்ன மணி, எப்படியிருக்கேள்?’ என்று இருகைகளையும் பிடித்துக்கொண்டு கேட்கும்போது, அவரை நேற்றுத்தான் சந்தித்தது போலிருக்கும். இடைவெளியைக் கடந்த நட்பு அது. காம்பஸ் வைத்து வரைந்ததுபோல் வட்ட முகம். கண்ணாடிக்குப் பின்னாலிருந்து சிரிக்கும் கண்கள். அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கெல்லாம் இதே அனுபவம் இருந்திருக்கும். போன மாதம் மறைந்த திரு.பூர்ணம் விசுவ நாதனைப்பற்றிச் சில நினைவுகளை உயிர்மை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்று நினைக்கிறேன்.
தில்லி ஆல் இந்தியா ரேடியோ செய்திப் பிரிவில் தமிழ்ச்செய்தி வாசிப்பாளராகப் பலவருடம் பணி புரிந்தார். நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் இந்தியா சுதந்திரமடைந்ததைத் தமிழில் உலகுக்குச் சொன்னவர். இவருடன் பணியாற்றிய ராமநாதன் (நடிகர் சரத்குமாரின் தந்தை), தர்மாம்பாள், வெங்கட்ராமன், நாகரத்தினம் இவர்களது குரல்கள் - தினமும் காலை ஏழே கால் மணிக்கு ‘ஆல் இண்டியா ரேடியோ . . . செய்திகள் . . . வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன் . . .’ செய்தியைப் பாதியிலிருந்து கேட்கத் தொடங்கும் நம்ம ஊர் பெரிசுகள் குரலை வைத்தே, ‘ஓ இன்னிக்கு பூர்ணமா?’ என்று கேட்குமளவிற்கு, டி.வி. வராத அந்தக்காலத்தில் தமிழ்நாட்டில் பரிச்சயமான குரலாக இருந்தது. கையில் ரிமோட்டுடன் 150 சானல்கள் கொண்ட இடியட் பாக்ஸ் இல்லாத காலத்தில் தமிழ்ச் செய்திகளுக்கு, காலையில் 5,30 மணிக்கு (தென்கிழக்காசிய சேவை), காலை 7.15, மதியம் 1.30, மாலை 7.15 மணிக்கு இவர்களை விட்டால் வேறு மார்க்கமில்லை! ஜனாதிபதியோ முக்கியமான மத்திய அமைச்சரோ இறந்தாலும், அந்தச் செய்திக்காக நாம் காத்திருக்க வேண்டும். இப்போதைய சானல்களில் Breaking News என்ற சாக்கில் அரைத்த மாவையே அரைப்பது போல் 24 மணிநேரமும் ‘செய்திகளை உடைப்பது’ போன்ற வியாபார உத்திகள் அப்போதைய அப்பாவி ஆல் இந்தியா ரேடியோவுக்குத் தெரிந்திருக்கவில்லை. தமிழ்ச்செய்தி வாசிப்பாளர் தர்மாம்பாள் இலங்கைத் தமிழ் ரசிகர்கள் அழைப்பில், தில்லியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கே போய்வந்தவர்! போய்விட்டு வந்து ஆறுமாதத்துக்குப் பிறகும், நேரில் பார்ப்பவர்களிடம், தன் சிலோன் விஜயத்தைப் பற்றி அரைமணி நேரம் அறுக்காமல் விடமாட்டார். யாரும் அவர் எதிரே மாட்ட பயப்படுவார்கள்.
நெல்லை மாவட்டத்தில் பிறந்த இவருக்கு பூர்ணம் என்பது அவர் தந்தையின் பெயரான பூர்ண கிரு பேசுவரன் என்பதன் சுருக்கம். பூர்ணம் விசுவநாதனின் மூத்த சகோதரர், பூர்ணம் சோமசுந்தரம் ரேடியோ மாஸ்கோ தமிழ்ப்பிரிவின் தலைவராக இருந்தார். அங்கேயே ஒரு ரஷ்யப்பெண்மணியை மணம் புரிந்துகொண்டு மாஸ்கோவிலேயே செட்டிலாகிவிட்டார். ஐம்பதுகளில் ஒரு தமிழர் சேலையுடுத்திய வெளி நாட்டு மனைவியிடம் ரஷ்யமொழியில் பேசுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இன்னொரு சகோதரர் ஐம்பதுகளில் எழுத்தாளராகப் புகழ்பெற்றிருந்த உமாசந்திரன் -இவர் சென்னை டி.ஜி.பி.யாக இருந்த நடராஜ், ஐ.பி.எஸ். அவர்களின் தந்தை. உமாசந்திரனின் கதையைத் தான் டைரக்டர் மகேந்திரன் ‘முள்ளும் மலரும்’ திரைப்படமாக எடுத்தார். விசுவநாதனின் தங்கை பூர்ணம் லட்சுமி தில்லி ஆல் இந்தியா ரேடியோ External Services Division தினமும் காலை 5.30-6.30மணிக்கு ஒலிபரப்பும் தென்கிழக்காசிய நேயர்களுக்கான தமிழ்ப்பிரிவில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தார். தில்லியில் அவர் மறையும் வரை எனக்குக் குடும்ப நண்பர். திருமண வாழ்க்கையில் விருப்பமில்லாமல் பெண்ணியத்தின் இலக்கணமாக இருந்தவர். என் வயதுள்ள யாழ்ப்பாண, மலேஷிய, சிங்கப்பூர்த் தமிழ் ரசிகர்களுக்கு பூர்ணம் லட்சுமியின் குரலும் பரிச்சயமாக இருந்தது. ‘....அடுத்ததாக வெள்ளவத்தை கார்த்திகேசு, கோலாலம்பூர் சிவசாமி, யாழ்ப்பாணம் சங்கரலிங்கம் . . . பினாங்கு பீர் முகம்மது . . . ரங்கூன் ரமாதேவி ஆகியோர் விரும் பிக்கேட்ட பாடல் 'தூக்கு தூக்கி’ படத்திலிருந்து டி.எம். சௌந்தரராஜன் பாடியது . . .’ என்று அவரது கணீரென்ற குரல் ஐம்பதைத் தாண்டிய அ. முத்துலிங்கம் போன்றோருக்கும் நினைவிருக்கலாம்.
1955-ல் நான் தில்லி போன இரு வாரங்களில், சௌத் இந்தியா கிளப் ஆண்டுவிழா கலைநிகழ்ச்சியில் பூர்ணம் எழுதி நடித்த ஓரங்க நாடகம் இடம் பெற்றிருந்தது. நாடகத்திற்குப்பிறகு 'விலாசமில்லாத’ என்னை அறிமுகப்படுத்திக்கொண் டேன். பிறகு ஒரு நாள் ரேடியோ ஸ்டேஷனில் சந்தித்தபோது, ‘மணி, அடுத்த நாடகத்தில் உங்களுக்கும் ஒரு ரோல் இருக்கு. ரிகர்ஸலுக்கு வந்துடுங்க’ என்றார். நானும் அவர் நடிக்கும் ஓரங்க நாடகங்களில் பங்குபெற ஆரம்பித்தேன். தில்லியில் தமிழ் நாடகத்திற்கென்றே தனி அமைப்புகளாக எனது தட்சிண பாரத நாடக சபாவும், பூர்ணம் பங்குபெற்ற சௌத் இந்தியன் தியேட்டர்ஸும் பின்னால்தான் தொடங்கப்பட்டன.
நான் தில்லி போன மறுமாதமே AIR External Services Division தமிழ்ப் பிரிவு தினமும் காலை 5.30 முதல் 6.30 வரை ஒலிபரப்பும் நிகழ்ச்சியில் இடம்பெறும் ரேடியோ நாடகங்களில் பங்குபெற கான்ட்ராக்ட் வர ஆரம்பித்தது. மாதத்தில் ஐந்தாறு நாடகங்களில் கலந்துகொள்வேன். தில்லி போகுமுன்னரே திருவனந்தபுரம் திருச்சி ரேடியோ நிலையங்களில் ஆடிஷனில் தேர்ந்து நடித்து வந்தவன். அப்போதெல்லாம் ரிக்கார்டிங் வசதி கிடையாது. செய்தி வாசிப்பதுபோல நாடகங்களும் லைவ் தான். அந்த நாடகங்களை பூர்ணம் லட்சுமி, தர்மாம்பாள், என். ஆர். ராஜகோபாலன் போன்றவர்கள் இயக்குவார்கள். தில்லி குளிர்காலத்தில் அதிகாலை மூன்றுமணிக்கு அலாரம் வைத்து எழுந்து, வெடவெட குளிரில் குளித்துத் தயாராகி, வாசலில் அழைத்துப் போக வரும் AIR Van அடிக்கும் ஹாரனுக்காகக் காத்திருக்கவேண்டும். உலகமே நிச்சிந்தையாகத் தூங்கும் நேரமது. போகும் வழியில், பூர்ணம் லட்சுமியையும், வினே நகரிலிருந்த பூர்ணத்தையும் மற்ற நடிகர்களையும் ஏற்றிக்கொள்ளும். வழியில் அண்ணன்-தங்கை பேசிக் கொள்வதைக் கேட்டால், அவர்கள் பாசம் இழையோடும். ரேடியோ ஸ்டேஷன் போகும்வரை லட்சுமியின் 'கொல்'லென்ற சிரிப்பு (ஆமாம், இதென்ன சிரிப்பு?!) தொடரும். இந்த ஒருமணிநேர நிகழ்ச்சி 10 நிமிட தமிழ்ச்செய்தியுடன் தொடங்கும். அதனால் தன் மேசையில் தயாராக வைத்திருக்கும் ஆங்கிலப் பிரதியைத் தமிழில் மொழிபெயர்த்துத் தயாராக்கத் தமிழ் யூனிட்டை நோக்கி ஓடுவார் பூர்ணம்.
முன்பே ஒருதடவை வந்து ஒத்திகை பார்த்திருப்பதால், நாங்கள் அவசரமில்லாமல் ஸ்டுடியோவுக்குப் போவோம். சரியாக ஐந்தரை மணிக்கு முகப்பு அறிவிப்பு முடிந்ததும் அடுத்த ஸ்டுடியோவிலிருந்து, விசு ‘ஆல் இண்டியா ரேடியோ . . . செய்திகள் . . . வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்..’ என்று தன் கணீரென்ற குரலில் ஆரம்பிப்பார். அதற்குமுன் நாங்கள் இடையிலுள்ள கண்ணாடிச்சுவர் வழி கட்டைவிரலை உயர்த்தி ‘Best of Luck!’ சொல்லுவோம். நாடகத்துக்குத் தேவையான பிரதிகளை காப்பி எடுத்து Copywriter பஞ்சாபகேசன் தயாராக வைத்திருப்பார். இவரைத் தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் பஞ்சாபகேசன் என்ற பெயரிலல்ல. இவர் தான் நடிகர் அர்விந்த் ஸ்வாமியின் தந்தையும், மெட்டி ஒலி போன்ற பல சீரியல்களில் அப்பா வேஷத்தில் நடிப்பவருமான டில்லி குமார் அவர்கள். தில்லி மேடையில் பூர்ணத்துடன் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறார். ஸ்டுடியோ கடிகாரத்தின் மேல் இருக்கும் ON AIR என்ற சிவப்பு விளக்கு எரியும்போது, உலகத்தில் அனைவருமே தூக்கத்தை மறந்து, என் நாடகத்தைக் கேட்க ரேடியோ பெட்டிகள் முன் உட்கார்ந்திருப்பதாகக் கற்பனை செய்துகொள்வேன். ரேடியோ நாடகத்தில் பார்த்துப் படிப்பதால், வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டிய தேவையில்லை. ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்துக்குப் போகும்போது, குனியாமல் பேசிக்கொண்டே மைக்கில் பேப்பர் சலசலப்பு சத்தமில்லாமல் கீழே நழுவவிடுவது ஒரு கலை. வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள, என் நேரத்தை வேலை செய்யும் கம்பெனிகளுக்கும், அது சம்பந்தமான பிரயாணங்களுக்கும் தாரை வார்த்துக்கொடுக்கும் வரை, தில்லியில் ஆயிரம் ரேடியோ நாடகங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். அவை என் தில்லி வாழ்க்கையில் ரம்மியமான நாட்கள்.
நாடகம் முடிந்து, Duty Officer Room-க்கு வந்து தயாராக வைத்திருக்கும் நமது காசோலைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர் ரூமில் வைத்திருக்கும் நாலைந்து ஸ்பீக்கர்களிலிருந்து அப்போது ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, ஒரியா, பெங்காலி நிகழ்ச்சிகள் மொழி புரியாத ஓர் ஒலிக்கலவையாக எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். அதை நாம் ஒருமணி நேரம் கேட்டுக்கொண்டிருந்தால், உத்தரவாதமாக பைத்தியம் பிடித்துவிடும். ஆனால் அதையெல்லாம் அவர் நாள் பூராவும் கேட்டாகவேண்டும். அவர் ‘Duty!’ டூட்டி ஆபீசரல்லவா? மற்றவர்களுக்கெல்லாம் ரூ.15 எனக்கு மட்டும் ரூ. 20. ஏனென்றால் நான் 1948-லேயே திருவனந்தபுரம் ரேடியோ ஸ்டேஷனில் ஆடிஷன் ஆன ‘ஏ’ கிரேடு ஆர்ட்டிஸ்ட். மற்றவர்கள் வெறும் கையெழுத்து போட்டு காசோலையை வாங்கிக் கொள்வார்கள். எனக்கு மட்டும் ரூ. 20 என்பதால் ரசீதில் ஒரு அணா ரெவென்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்துப்போடவேண்டும். ஒரு அணா (ஆறு பைசா) இல்லையென்றால், உன் சொத்தை விற்றாவது ஓரணா கொண்டுவா, பிறகுதான் செக் தருவேன் என்பார்கள். சில சமயம் பாக்கெட்டில் சில்லறையில்லாமல், நியூஸ் ரூமுக்கு ஓடிப்போய் பூர்ணம் விசுவநாதனிடம் ஒரு அணா கடன் வாங்குவேன். (இந்தக் கடனை கான்டீனில் காபி வாங்கிக் கொடுத்து கழித்துவிடுவேன்.) இந்த ரூ. 20-க்கான Government of India காசோலைக்கு ராஷ்டிரபதி பவனில் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருக்கும் குடியரசுத் தலைவரைத் துணைக்குக் கூப்பிட்டு For and on behalf of President of India Accounts Officer கையெழுத்து போட்டிருப்பார். இந்த இருபது ரூபாயைப் பணமாகக்கொடுக்க நம் அரசாங்கத்தின் ரூல்ஸ் இடம் தராது. இன்னும் நாம் மாறவில்லை. No body can beat our Indian Bureaucray. அமெரிக்கா போய்விட்டு வந்த இந்திரா பார்த்தசாரதி தன் பென்ஷன் அரியர் ஸுக்கு விண்ணப்பித்தபோது, ‘ஆறு மாதத்துக்கு முன்னால் உயிரோடு இருந்தீர்கள்’ என்பதற்கான சான்றிதழுடன் நேரில் வரவும்’ என்றது தில்லி பல்கலைக்கழகம்!
ஏழுமணி அளவில் AIR Canteenல் காத்திருப்பேன். செய்தி வாசிப்பு தடங்கலின்றி நிறைவேறியதாக ஒரு ரிப்போர்ட் எழுதி டூட்டி ஆபீசரிடம் கொடுத்துவிட்டு பூர்ணமும் வருவார். அந்தவேளையில் கான்டீன் காலியாகவே இருக்கும். அங்கே காலைவேளையில் சுடச்சுட மெதுவடை கிடைக்கும். ஆனால் தொட்டுக்கொள்ள சட்னிக்குப்பதிலாக, வெள்ளைப் பூசணிக்காயுடன் புளிகாரம் உப்பு கலந்து அரைத்த ஒருவகை ஸாஸ்தான் பாட்டிலில் வைத்திருப்பார்கள். ஒருநாள் காலை இருவரும் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, இருபது வயதுள்ள ஒடிசலான ஓர் இளம் பெண்மணி கையில் காபி கப்புடன், ‘Can I join you?’ என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் எங்கள் எதிரில் உட்கார்ந்தார். சரளமான ஆங்கிலத்தில், பூர்ணத்தைத் தெரியுமென்றும் அடிக்கடி பார்த்திருப்பதாகவும் சொன்னார். தன் பெயர் ஆங் ஸான் ஸூ சி என்றும் தில்லியில் தங்கிப் படிப்பதாகவும், காலை நேரங்களில் வெளிநாட்டுச்சேவை ஒலிபரப்பில் பர்மியமொழிச் செய்தி வாசிப்பாளராக இருப்பதாகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ரேடியோ ஸ்டேஷனில் பர்மீஸ் யூனிட்டைத் தாண்டித்தான் தமிழ் யூனிட்டுக்குப் போக வேண்டும். பிறகு அதே கான்டீனில் எப்போதாவது பார்க்க நேர்ந்தால் முகமன் சொல்லிக்கொள்வோம். ஒருமுறை, பர்மியரான அவர் இந்தியாவில் தங்குவதில் சில சிக்கல்கள் இருப்பதாகச் சொன்னார். வெளியுறவுத்துறையின் கீழ் இயங்கும் Foreigner's Registration Office-ல் என் நெருங்கிய நண்பன் உயர் பதவியில் இருந்ததால், என் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, அவனைப் போய்ப் பார்க்கச்சொன்னேன். அடுத்தவாரம் பார்க்க நேர்ந்தபோது, ஓடி பக்கத்தில் வந்து, என் நண்பன் உதவியால் இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகள் தங்க அனுமதி ஒரு நொடியில் கிடைத்துவிட்டதாக நன்றி சொன்னார். அதன்பிறகு அவரை நான் சந்திக்கவில்லை. அவர்தான் 1991-ம் ஆண்டு சமா தானத்துக்கான நோபல் பரிசு பெற்ற பர்மியப் போராளி Aung San Suu Kyi. 1990-ல் மிலிட்டரி சர்வாதி காரத்தை எதிர்த்து, சமாதானப் போர் நடத்தி, வீட்டுச்சிறையிலிருந்த படியே, பிரசாரத்துக்குக்கூடப் போகாமல், தன் கட்சியான Natioonal League of Democracy-க்கு 80% இடங் களைத் தேடிக்கொடுத்தவர். ஜன நாயகத்தில் நம்பிக்கையில்லாத பர்மிய மிலிட்டரி சர்வாதிகாரம் தேர்தலை, null and void என்றுகூறி ஆட்சியிலிருந்து விலக மறுத்தது. உலக வல்லரசுகளும் பத்திரிகை களும் வற்புறுத்தியும்கூட, அவரை ஸ்வீடனுக்கு நேரில் போய் நோபல் பரிசைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. 1989-லிருந்து இன்றுவரை - சில மாதங்கள் தவிர - பர்மிய சர்வாதிகாரம் இவரை வீட்டுக்காவலிலேயே வைத்திருக்கிறது. இந்த நூற்றாண்டிலும் சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. உலகத்தின் இரண்டாவது பெரிய ஜனநாயக வல்லரசான நாம், மௌனமாகப் பார்த்தும் பார்க்காமலிருக்கிறோம். இல்லை.... ஆரம்பத்தில் 1969-ல் Ghungi Gudiya (பேசாத பொம்மை) என்று கேலியாகவும் பிறகு எண்பதுகளில் The only Man in her entire Cabinet என்றும் அரசியல் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட இந்திரா காந்தி போல் இன்னொருவர் வரக் காத்திருக்கிறோமா?
நான் சென்னை வந்தபிறகு, 2002-ல் ஸூ சி அம்மையாரை காவலிலிருந்து விடுவிக்கவேண்டுமென்று போராட்டம் வலுத்து வந்தது. தினமும் அவர் பெயர் தினசரிகளில் தென்பட்டது. செய்திச்சானல்களில் அடிக்கடி வருவார். அப்போது ஒரு நாள்திரு. பூர்ணத்தைப் பார்க்கப் போயிருந்தேன். பேசிக்கொண்டிருக்கும்போது, ‘இந்த அம்மையாரை நாம் சந்தித்திருக்கிறோம். ஞாபகம் இருக்கிறதா?’ என்று கேட்டேன். அவருக்கு நினைவில்லை. விளக்கிச் சொன்னவுடன் மகிழ்ச்சியோடு, ‘அப்போ நாம ஒரு நோபல் ப்ரைஸ் வின்னருடன் கைகுலுக்கியிருக்கிறோம்!’ என்றார். நான், ‘இல்லை. In anticipation of her getting Nobel prize, நாம 25 வருஷம் முன்னாடியே அட்வான்ஸா கைகுலுக்கி விட்டோம்’ என்று சொன்னதும் கண்ணை மூடிக்கொண்டு சிரித்தார்.
தில்லி சௌத் இந்தியன் தியேட்டர்ஸ் சார்பில், பிரஸிடென்ட் பஞ்சாட்சரம், நாலுவேலி நிலம், போலீஸ்காரன் மகள், தேவனின் கோமதியின் காதலன், ரமேஷ் மேத்தாவின் அண்டர் செக்ரட்டரி போன்ற நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடித்தார். கோமதியின் காதலனில், கோவிலுக்குப் போய்விட்டு அர்ச்சனைத்தட்டுடன் வீட்டுக்குத் திரும்பும் பூர்ணம், தெருவில் நண்பருடன் பேசிக்கொண்டிருப்பார். அவ்வப்போது அர்ச்சனைத் தட்டிலிருக்கும் அட்சதைகளை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டுக்கொள்வார். உடைத்த தேங்காய்மூடியை நகத்தால் கிள்ளுவார். This is the sopontaneous use of Set Properties by a Performer! யதார்த்த நடிப்பில் ஊறியவருக்குத்தான் இது கைவரும். தேர்ந்த நடிகருக்கான உத்தி. இதை ஒரு பத்திரிகையில் பதிவு செய்திருக்கிறேன்.
தில்லியில் அடிக்கடி நடக்கும் ‘யாத்ரிக்’ குழுவின் ஆங்கில நாடகங்கள், சம்புமித்ரா, ஷ்யாமானந்த் ஜலான், சத்யதேவ் தூபே, உத்பல் தத் போன்றவர் நாடகங்களுக்கோ, இப்ராஹிம் அல்காஸியின் என். எஸ்.டி நாடகங்களுக்கோ அவர் வந்ததேயில்லை. கூப்பிட்டால், ‘டூட்டி இருக்கு, மணி’யென்று தப்பித்துக்கொள்வார். அவைகளைப் பார்த்து புதிதாகத் தெரிந்துகொள்ள அவருக்கு அவசியம் இருந்ததில்லை.
எனக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு. சுஜாதா எழுதிய நாடகங்களில், சென்னையில் இவர் நடித்த பாத்திரங்களை தில்லியில் நான் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பேறு! அவர் 'பூர்ணம் தியேட்டர்ஸ்' தொடங்கியபின், தில்லிக்கு நாடகம் போட வந்திருந்தார். முதல் நாடகம் ‘தனிக்குடித்தனம்’. சென்னையிலிருந்து செட் சாமான்கள் ஏற்றிவந்த லாரி நாக்பூர் அருகே ரிப்பேராகிவிட்டதால், அவசர அவசரமாக எங்கள் D.B.N.s குழுவின் செட் உபகரணங்களைக் கொண்டு போய் மேடையமைப்பு செய்து கொடுத்தது ஞாபகம் வருகிறது.
எங்கள் நட்பு இறுக்கமானது அவரது சகோதரி லட்சுமி இறந்தபோது. திருமணத்தில் நாட்டமில்லாத அவர் தனியாக மோதி பாக்கில் ஓர் அரசாங்கவீட்டில் குடியிருந்தார். சென்னையிலிருந்த பூர்ணத்துக்குத் தங்கையின் மரணச் செய்தியை அறிவித்ததே நான் தான். அவர் தில்லி வரும்வரை காத்திருந்து, நிகம்போத் சுடுகாட்டுக்கு சடலத்துடன் போய், கடைசிவரைகூட இருந்தேன். கிட்டத்தட்ட நவம்பர் 2007 உயிர்மையில் நான் பதிவு செய்த ‘தில்லி நிகம்போத் சுடுகாடு’ கட்டுரையில் எழுதியிருந்ததையெல்லாம் அவர் நேரில் பார்த்திருக்கிறார். காரில் திரும்ப வரும் போது, 'மணி, நீங்க இவ்வளவு உதவியா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலே. லட்சுமியின் ஆத்மா உங்களை வாழ்த்தும். உங்களுக்கு சுடுகாட்டிலேயும் நெறைய நண்பர்கள் இருக்காங்களே’ என்றார். ‘நான் கடைசியா இங்கே தானே வந்தாகணும். அப்போ என்னை ஸ்பெஷலா கவனிச்சுப்பாங்களே' என்ற பதிலுக்கு, அவர் உரக்க ‘No silly Joikes’ என்று சொல்லி என் வாயைப் பொத்தினார். பிறகு அவர் குடியிருந்த வீட்டை காலிசெய்து சாமான்களை ஒரு லாரியில் ஏற்றி, சென்னையில் பூர்ணம் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். உயிர்மையில் நான் தில்லி நிகம்போத் சுடுகாட்டைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையைப் பாராட்டி நீண்ட நேரம் பேசினார். ‘நான்தான் நேரிலேயே பார்த்திருக்கேனே. You are a great person’ என்று ஒரு சர்ட்டிபிகேட்டையும் கூடவே தந்தார்.
என்னைப்போன்ற இவரது தில்லி நண்பர்களுக்கு வருத்தமளிக்கும் விஷயம் இவருக்கும் இசை விமர்சகர் சுப்புடுவுக்குமிடையே இருந்த தீராப்பகை. அதன் காரணகாரியங்களை இப்போது ஆராய வேண்டாம். தில்லியில் நடந்த சில சம்பவங்கள் இவரை அளவுக்கதிகமாகக் காயப்படுத்திவிட்டன. பூர்ணம் சென்னைக்கு மாற்றலாகி வந்ததற்கு அவையும் முக்கியமான காரணங்கள். எங்கள் சமரச முயற்சிகள் கடைசிவரை பலனளிக்கவேயில்லை.
தொண்ணூறுகளில் மத்திய சங்கீத நாடக அகாடெமி இவருக்குச் சிறந்த நாடக நடிகருக்கான விருதையளித்து தன்னையும் கௌரவப்படுத்திக்கொண்டது.
பலருக்குத்தெரியாத விஷயம் பூர்ணம் ஒரு தேர்ந்த நகைச்சுவை எழுத்தாளர் என்பது. ஐம்பது அறுபதுகளில் தில்லி தமிழ்ச்சங்கம் வெளியிட்டுவந்த ‘சுடர்’ ஆண்டு மலரில் இவரது ஓரங்க நாடகங்கள் தவறாமல் இடம்பெறும். சென்னை பத்திரிகைகளிலும் அடிக்கடி எழுதிக்கொண்டிருந்தார். பிரபல பத்திரிகைகளின் தீபாவளி மலரில் எழுதுவார். இவரது ஓரங்க நாட கங்களில்தான் என் தில்லி நாடக வாழ்க்கை தொடங்கியது. சென்னைக்கு வந்தபின் ஏனோ எழுதுவதைக் குறைத்துக் கொண்டுவிட்டார். அதனால் தமிழுக்குத்தான் நட்டம்.
என் நண்பர் மரபின் மைந்தன் சொன்னது:
தமிழிலக்கிய மேடைகளிலும் பூர்ணம் விசுவநாதன் பலமுறை பேசுபொருளாகியிருக்கிறார்.
ஒரு விழாவில் பார்வையாளர் வரிசையில் அவர் வந்து அமர்ந்த போது, பேச்சாளர் ஒருவர் சொன்னார்: "கொழுக்கட்டை மாதிரி இருக்காரே இவர் யார்னு விசாரிச்சேன் . . . பூர்ணம்னு சொன்னாங்க! அதுசரி, பூர்ணம் இருந்தாத்தானே கொழுக்கட்டை." தமிழக அரசின் சுற்றுலா சம்பந்தப்பட்ட குழு ஒன்றில் பூர்ணம் விசுவநாதன் ஆலோசகராக இருந்தார். அதன் விழா ஒன்று நிகழ்ந்தபோது பார்வையாளர்கள் மத்தியில் வந்து அமர்ந்தார். வீடியோ வெளிச்சத்தில் மேடையில் இருப்பவர்களுக்குக் கண்கூசிற்று. பேச்சாளர் கண. சிற்சபேசன் கூறினார்: "இங்கிருந்து பார்த்தா பூர்ணம் மாதிரித் தெரியுது, ஆனா பூரணமாத் தெரியலை."
'பாரதி’ படப்பிடிப்பின்போது, நடிகர்கள் தேர்வு எனக்களிக்கப் பட்ட பணிகளில் ஒன்று. டைரக்டர் ஞான. ராஜசேகரன் பூர்ணத்தைப் பார்த்துவரச் சொன்னார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பூர்ணம், கண் ஆபரேஷனுக்குப்பிறகு அதிக வெளிச்சம் பார்த்தால் கண் கூசுகிறது என்பதால் பாரதியில் நடிக்க இயலாதென்று வருத்தம் தெரிவித்தார். He has acted in some good, bad and indifferent Movies. ‘மகாநதி’ இவரது மாஸ்டர்பீஸ்! ‘மூன்றாம் பிறை’ படத்தில் சில்க் ஸ்மிதாவுடன் நெருங்கி நடிக்கும்போது கொஞ்சம் நெளிந்தார். இவரது நடிப்பை Stereotyped Acting என்று இப்போது இவர் மறைவுக்குப்பின் பல வலைப்பூவினர் விமர்சனம் செய்கின்றனர். இது இவரது குறையல்ல. கமல் போன்ற வெகுசிலரைத்தவிர, மற்றவர்கள் இவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இவருடைய திரைப்பட வாழ்க்கையைப் பற்றி, என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். பல நடிகர் - குரலில் பேசும் இன்றைய மிமிக்ரி கலைஞர்களுக்கு வாரி வழங்கும் ஒரு அட்சயப் பாத்திரமாக பூர்ணம் திகழ்கிறார்.
தில்லியில் சுஜாதாவுக்கு பூர்ணம் விசுவநாதனை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை அடியேனையே சாரும். அப்போது அவர்கள் நட்பு சென்னை வந்தபிறகு ஒரு நாடகக் கூட்டணியாக மாறி இந்த அளவு விகசிக்குமென்று மூவருமே நினைத்ததில்லை.
கையில் லக்கேஜ் எதுவும் இல்லாமல் மேலுலகம் போன பூர்ணம், ஊர்தியை விட்டு இறங்கியதுமே, வழியில் தென்பட்ட தேவதையிடம், ‘அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?’ என்றுதான் கேட்டிருப்பார். ஆமாம், ஏழு மாதங்களுக்கு முன் மேலே போன சுஜாதா எழுதித் தயாராக வைத்திருக்கும் புது நாடகத்தில் நடிக்கத்தான் போயிருக்கிறார்.

Thursday, December 25, 2008













Thursday, October 2, 2008

ஆல் இந்தியா ரேடியோ பூர்ணம் விஸ்வநாதன் மரணம்


பிரபல குணச்சித்திர நடிகர், நாடக இயக்குநர் பூர்ணம் விஸ்வநாதன் இன்று மாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 78. தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத சில நடிகர்களுள் முக்கியமானவர் பூர்ணம் விஸ்வநாதன். 1945ல் ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக தன் பணியைத் தொடங்கிய விஸ்வநாதன், தன் குரல் வளத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ்ச் செய்தியில் முதன் முதலில் கிழக்காசிய நாடுகளுக்கு அறிவித்த பெருமை இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும் இரக்க சுபாவமுள்ள பல பாத்திரங்களில் நடித்த பெருமையும் இவரை சாரும்.ரஜினியுடன் இவர் வித்தியாசமாக நடித்த தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும் படங்கள் இன்றும் மறக்க முடியாதவை.கமல்ஹாசனுடன் மகாநதி, மூன்றாம் பிறை படங்களில் மிக அற்புதமாக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.விதி, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, புதுப்புது அர்த்தங்கள், கேளடி கண்மணி, ஆண் பாவம் என இவர் பங்கேற்ற மிகச் சிறந்த படங்களின் எண்ணிக்கை ஏராளம்.சினிமாவைத் தவிர, நாடகத்திலும் மிகுந்த ஈடுபாடு காட்டியவர் விஸ்வநாதன். தனது பூர்ணம் தியேட்டர்ஸ் மூலம் பல நெகிழ்ச்சியூட்டும், அர்த்தமுள்ள நாடகங்களைத் தந்தவர்.மறைந்த எழுத்துலக மேதை சுஜாதா, பூர்ணம் விஸ்வநாதனுக்காகவே எழுதிய நாடகங்கள் அன்புள்ள அப்பா, ஊஞ்சல், அப்பாவின் ஆஸ்டின் கார்... இன்னும் பல.சமீப காலமாக இவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். காய்ச்சல் அதிகமானதன் காரணமாக சில தினங்களுக்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு நினைவு தப்பியது. மாலை 4 மணிக்கு அவர் மரணமடைந்தார். தமிழ் கலைத்துறைக்கு பெரும் இழப்பு பூர்ணம் விஸ்வநாதனின் மரணம்.

Sunday, September 21, 2008

NEW ZEALAND முத்தமிழ தமிழ் வானொலி

NEW ZEALAND முத்தமிழ் தமிழ் வானொலி சனி கிழமைகளில் 104.60 பண்பலையில் ஒலிபரப்பாகிறது.

என் அப்பாவின் ரேடியோ - ஷாஜி





மாலையில் குன்றுகளுக்குமேல் குளிர்ந்த காற்று சுழன்றுகொண்டிருந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை இன்னொரு துயரமான நாள். ஏழுவயதான நான் தனித்தவனாக, கைவிடப்பட்டவனாக, குன்றின் உச்சியில் இருந்த வீட்டுக்கு முன்னால் வெண்மேகங்களை ஊடுருவி மண்ணில் சாயும் சூரியக் கதிர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். திடீரென்று குன்றுக்கு கீழே வளைந்துசெல்லும் மண்சாலையிலிருந்து ஒரு இசைத்துணுக்கு சிதறி வருவதைக் கேட்டேன். நான் அங்கிருந்த ஒரு துருத்தி நிற்கும் பாறையை நோக்கி ஓடினேன். அதிலிருந்து பார்த்தால் தழைத்த பச்சைக்கிளைகளினூடாக பாதையை ஓரளவு பார்க்க முடியும். வேட்டியும் சட்டையும் அணிந்த ஓர் உயரமான மனிதன் வீட்டை நோக்கி வருவதைக் கண்டேன். இசை நெருங்கி நெருங்கி வந்தது. அவர் கையில் ஒரு ரேடியோ இருந்து பாடுவதை அப்போதுதான் கவனித்தேன்.
அடுத்த கணம்தான் அது என் அப்பா என்பதை உணர்ந்தேன். என்னுடைய உற்சாகம் எல்லை கடந்தது. எவரிடமும் அனுமதி கோராமல் நான் கீழே பாய்ந்து போய் என் 'அச்சாய'னை நெருங்கினேன். உரிமையாளனை நெடுநாட்களாகப் பிரிந்திருந்த குட்டிநாய் போல அப்பாவை சுற்றி சுற்றிவந்து அந்த ரேடியோவைப் பார்த்தேன். “உக்காந்து படிக்காம இங்க என்னடா பண்றே?” என்ற அப்பாவின் அதட்டல் என் உற்சாகத்தைக் குறைக்கவேயில்லை. நாங்கள் குன்றுமீது ஏறிக்கொண்டிருக்கும்போது இசையும் கூடவே வந்தது. உலகையே உரிமைகொண்டவனின் பெருமிதத்துடன் நான் அப்பாவின் பின்னால் நடந்துவந்தேன். என் அப்பாவிடம் ரேடியோ இருக்கிறது! என்னை அதட்டும் என் மாமாக்களால் கனவிலும் நினைக்க முடியாத ஒன்று!
அது என் அம்மாவின் பிறந்த வீடு. அங்கே நின்று படிப்பதற்காக என்னை விட்டிருந்தார்கள். என் சொந்த வீட்டிலிருந்து பத்து மைல் தொலைவிருக்கும். ஏழுவயதான எனக்கு அது நெடுந்தொலைவு. அது ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். என் தாத்தா மிகவும் கண்டிப்பானவர். பாட்டி எதைப்பற்றியோ தெரியவில்லை, எப்போதுமே குறை சொல்லி திரிவார். மாமாக்களின் முக்கிய பொழுதுபோக்கு என்னை கண்டிப்பதும் அடித்து வதைப்பதும்தான்.

அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. என் தாத்தாவும் அப்பாவும் சாயங்கால குடிக்குப்பின் உரக்க பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ரேடியோவை நெருங்கி அமர்ந்து அதைக் கேட்ட படியும் யாரும் பார்க்காமல் தொட முயன்றபடியும் இருந்தேன். அந்த குமிழ்களைத் திருகவேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தேன் என்றாலும் அப்பாமீது கடுமையான அச்சமும் இருந்தது. மறுநாள் மாலை என் அப்பா கிளம்புவதுவரை ரேடியோ உச்சத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவர் சென்றபோது நான் மனமுடைந்து அழுதேன். முக்கியமாக அப்பா அந்த ரேடியோவைக் கொண்டுபோனதில் உள்ள துயரத்தால்தான். அப்பாவுடன் என் வீட்டுக்குச் சென்று அந்த ரேடியோ அருகிலேயே அமர்ந்து கொள்ள விரும்பினேன். அந்த நாள்வரை தொலைதூரத்தில் இருந்த என் அம்மாவையும் தங்கையையும் நினைத்து தனிமையில் அழுத நான் அன்றிலிருந்து அந்த ரேடியோவையும் நினைத்து அழ ஆரம்பித்தேன். பள்ளிக்குப் போகிற வழியில் எங்கிருந்தாவது கேட்கும் ரேடியோ பாட்டுகள் என் மனதில் துயரத்தை நிரப்பியது.
ரேடியோ பற்றிய என் முதல் நினைவென்பது பெரிய, உலோக நிறமான ஒரு ரேடியோபெட்டிதான். ஒருமுறை என் தூரத்துச் சொந்தக்காரர் ஒருவர் அதை எங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்தார். என்னை அது அக்கணமே கவர்ந்தது. பக்கத்தில் இருந்த பிற உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும் வழியில், எங்கள் வீட்டுக்கும் வந்திருந்தார். அவர் பிற வீடுகளுக்கு போனபோது நானும் அந்த ரேடியோவை பின் தொடர்ந்து அவருடன் சென்றேன். அந்த ரேடியோ அருகிலேயே நெடுநேரம் தங்கி நின்றேன்.
விரைவில் என் அப்பாவின் அண்ணா ஒரு ‘டிரான்ஸிஸ்டர்’ ரேடியோயை வாங்கினார். அந்தப் பிராந்தியத்தில் அதுதான் முதல். அப்படி ஒரு அற்புதமான பொருள் எங்கள் குடும்பத்திலேயே வந்திருப்பதை அறிந்ததும் நான் என் ‘பேரப்பனின்’ வீட்டுக்கு ஓடிச்சென்றேன். அது சிவப்பு கலந்த நிறமுள்ள அழகான சிறிய ரேடியோ. அதில் நான் கேட்ட முதல் பாடலை இன்றும் நினைவுகூர்கிறேன். “அயித்தானாம் நீ என் அயித்தானாம் நீ” என்ற தமிழ்பாடல்.
ஒரு வருடம் கழித்துதான் நான் பாட்டி வீட்டிலிருந்து நிரந்தர விடுதலைபெற்று எங்கள் வீட்டுக்குப் போக முடிந்தது. அன்றுமுதல் அந்த ரேடியோ என்னுடைய இணைபிரியாத தோழனாக இருந்தது. நான் அதனருகிலேயே தூங்கி விழிந்து உணவுண்டு வாழ்ந்தேன். ரேடியோயை விட்டுப்பிரிய மனமில்லாததனாலேயே நான் பள்ளியை வெறுத்தேன். சாயங்காலம் மனியடித்ததுமே மூச்சிரைக்க ஓடி வீட்டுக்கு வந்து ரேடியோ முன் பாய்ந்து சென்று அமர்வேன். என்னுள் இருக்கும் இசைப்பித்து அந்த ரேடியோ வழியாக வந்ததுதான் என்று எண்ணுகிறேன். யேசுதாஸ், எஸ்.ஜானகி, ஏ.எம்.ராஜா, பி.சுசீலா, ஜெயச்சந்திரன் போன்றவர்கள் என் கிராமத்து மனிதர்களைக்காட்டிலும் எனக்கு நெருக்கமானவர்களாக ஆனார்கள். ரேடியோ இல்லாமல் என்னால் உயிர்வாழமுடியாமல் ஆகியது.
அப்பா வீட்டில் இல்லாத நேரங்களில் நான்தான் ரேடியோவை இயக்குவேன். ஆலப்புழா, திரிச்சூர் நிலையங்கள் எங்கே இருக்கின்றன என்பதை என் கைகளே அறிந்திருந்தன. திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய நிலையங்கள் மெல்லிதாக கிடைக்கும். டி.எம்.சௌந்தர ராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியவர்களின் குரல்களைக் கொண்டுவந்த திருச்சிராப்பள்ளி, மதுரை நிலையங்கள் நன்றாக கிடைக்கும். அந்த ரேடியோ எனக்கு வெளியுலகைக் காட்டிக் கொண்டிருந்தது. நான் வாழ்ந்த மலைகள் எல்லையிட்ட சின்னஞ்சிறு கிராமத்துக்கு வெளியே முடிவிலா உலகம் ஒன்று விரிந்து கிடப்பதை நான் என் ரேடியோவில் கேட்டேன்.
இத்தனை மனிதர்களை, இத்தனை விரிந்த உலகை, இந்த சிறிய பெட்டி எப்படி கொண்டுவந்து சேர்க்கிறது என்று அறிய எனக்கு பெரும் ஆவல் இருந்தது. ஒரு நாள் ஒவ்வொரு புள்ளியிலும் ஒவ்வொரு நிலையம் எப்படி அமைந்திருக்கிறது என்ற ஆர்வம் எனக்கு அதிகரித்தது. குமிழை கடைசி நிலையத்துக்கும் அப்பால் திருப்பிக் கொண்டுசென்றால் என்ன கேட்கும்? குமிழ் ஒரு எல்லைக்குமேல் செல்ல மறுத்தது. நான் திருகியபடியே இருந்தேன். டின்ங்ங் . . . என்ற ஒலி கேட்டது. உள்ளே ஏதோ அறுந்து நிலையத்தைக் காட்டும் முள் காணாமலாயிற்று! நான் அப்படியே உறைந்து போனேன். என்ன நடக்கும் என்று நன்றாகவே தெரியும். அம்மாவிடம் ஓடிப்போய் சொல்லி என்னை காப்பாற்றும்படி கெஞ்சினேன். அம்மா "உனக்குத்தான் உங்கப்பாவை பத்தி தெரியுமே" என்று சொல்லிவிட்டபோது என் பயம் மேலும் அதிகரித்தது.
பகல் முழுக்க நான் அம்மா பின்னாலேயே சுற்றி கெஞ்சிக் கொண்டிருந்தேன். அப்பாவின் கோபத்திலிருந்து அம்மாவால் என்னை காப்பாற்ற முடியும் என்று நம்பினேன். அப்பா வரும் நேரம் நெருங்க நெருங்க என் நெஞ்சுத் துடிப்பு அதிகரித்தபடியே சென்று அதை என் காதாலேயே கேட்டேன்! அப்பா வரும் காலடியோசை கேட்டது. வழக்கம்போல அவர் வந்ததுமே ரேடியோயை எடுத்து அதை இயக்க ஆரம்பித்தார். பின்கட்டில் நான் செத்தவனைப்போல நின்று கொண்டிருந்தேன். அப்பா தன் கனத்த குரலில் “டேய் . . . வாடா இங்கே” என்று கத்துவதைக் கேட்டேன். அவர் முன் சென்று உறைந்து நின்றேன் “கழுவேறியுடெ மகனே.. என்னடா செஞ்சே ரேடியோவை?” நான் தப்புவதற்கான கடைசி முயற்சியாக முணுமுணுத்தேன் “நான் ஒண்ணுமே செய்யலை . . .” சொல்லி முடிப்பதற்குள் என் செவிட்டில் அடி விழுந்தது.
கோபத்தால் கொந்தளித்தபடி என்னை அவர் வசைபாடினார், அடித்தார். நான் அவரிடம் மன்னிப்பு கோரி கதறினேன். என் அம்மா நடுவே புக முயன்றபோது அம்மாவை அவர் கடுமையான கெட்டவார்த்தை சொல்லித் துரத்தினார். என்னை அடித்துச் சுழற்றி அறை மூலைக்குத்தள்ளினார். அந்த ரகளையில் என் கால்சட்டை கழன்றுவிட்டிருந்தது. நிர்வாணமாக இருந்ததை நான் உணரவேயில்லை. அப்பா அந்த ரேடியோவை எடுத்து வாசல்படியில் அடித்து உடைத்தார். உலகுக்கும் எனக்குமான ஒரே சாளரமாக இருந்த என் ரேடியோ வெறும் பிளாஸ்டிக் குப்பையாக மாறியது.
அப்பா மேலும் கோபத்துடன் என்னை நோக்கி ஓடிவந்தார். கையில் கிடைத்த அனைத்தையும் எடுத்து என்னை அடித்தார். ரேடியோவின் கைப்பிடியில் ஒரு கயிற்றைக் அகட்டி என் கழுத்தில் தொங்கவிட்டார். உடையாத சில பகுதிகளுடன் அது என் கழுத்தில் கனமாக தொங்கியது. அவர் என்னை வீட்டைவிட்டு எங்காவது ஓடிப்போகச்சொல்லி கத்தினார். அவர் சொல்லி முடிப்பதற்குள் நான் உயிர்தப்பி வெளியே ஓடினேன். பக்கத்து ஊரை நோக்கி சாலையில் முழுநிர்வாணமாக கழுத்தில் உடைந்த ரேடியோ தொங்க கதறியபடி ஓடினேன். அந்தி நேரம். வேலைக்குச் சென்றவர்கள் வீடுதிரும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னுடைய விசித்திரக் கோலத்தை நின்று பார்த்தார்கள். எனக்கு வெட்கம் தோன்றவில்லை. அடியின் வலியாலும் அச்சத்தாலும் நான் என்னை மறந்திருந்தேன்.
அப்போதும் அப்பா என் பின்னால் ரத்தவெறி கொண்ட காட்டு மிருகம் போல துரத்தி வந்துகொண்டிருந்தார். அவர் என்னைப்பிடித்து அந்த ரேடியோவை பிடுங்கி வயலில் வீசி எறிந்தார். திருப்பி வீட்டுக்குப் போகும்படிச் சொல்லி என்னை மீண்டும் அடித்தார். நான் திரும்பி வீடு நோக்கி கதறியபடி ஓடினேன். என் ரேடியோ போயிற்று. என் இசை போயிற்று. என் ஆத்மா ஆழமாகக் காயப்பட்டது.
பல மாதங்கள் வேறு ஒரு ரேடியோ வாங்காமல் இருந்தார் அப்பா. வாங்கிய போது ஒரு ஃபிலிப்ஸ் பாக்கெட் ரேடியோ வாங்கி போகும்போது கூடவே கொண்டுசெல்ல ஆரம்பித்தார். ஆனால் அவர் என்னை ரேடியோ கேட்பதிலிருந்து தடுக்க முடியவில்லை. நான் பக்கத்து வீடுகளுக்குப் போய் பாட்டு கேட்க ஆரம்பித்தேன். எங்கெல்லாம் பாட்டு ஒலிக்கிறதோ அங்கெல்லாம் செல்வேன்.
அன்றெல்லாம் சாதாரண மக்களின் ஒரே பொழுதுபோக்குச் சாதனம் ரேடியோவாகத்தான் இருந்தது. எந்த வசதியும் இல்லாதவர்கள் கூட ஒரு ரேடியோ வாங்கி வைத்திருந்தார்கள். ஆரம்பகால 'வால்வ்' ரேடியோக்கள் விலை அதிகமானவை, அளவில் பெரியவை. அவை பணக்கார வீடுகளை அலங்கரித்தன. 'டிரான்ஸிஸ்டர்' தொழில்நுட்பம் ரேடியோவை சிறியதும் மலிவானதுமாக ஆக்கியது. ஃபிலிப்ஸ், மர்ஃபி, நெல்கோ, புஷ் போன்ற இந்தியாவில் தயாரிக்கும் ரேடியோக்களைத் தவிர டெலிஃபங் கென், நேஷனல், பானாஸோனிக், சோனி, சான்யோ, தோஷிபா போன்ற வெளிநாட்டு ரேடியோக்களும் எங்கும் காணக்கிடைத்தன.
குறைந்த வான்தொலைவில் உள்ள நிலையங்கள் 'மீடியம் வேவ்' வரிசையிலும் தொலைதூர நிலையங்கள் 'ஷார்ட் வேவ்' வரிசையிலும் கிடைத்தன. வெளிநாட்டு நிலையங்களான பிபிஸி, ரேடியோ ஸ்ரீலங்கா, ரேடியோ பீகிங், வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, மாஸ்கோ ரேடியோ போன்றவையும் கிடைத்தன. ஸ்ரீலங்கா ரேடியோ, மாஸ்கோ ரேடியோ போன்றவை மலையாள நிகழ்ச்சிகளையும் அளித்தன. தீவிர கிறிஸ்தவர்கள் ரேடியோ செஷல்ஸ் மற்றும் வாடிகான் ரேடியோவின் மலையாள கிறித்தவ நிகழ்ச்சிகளைக் கேட்டனர்.
மக்கள் ரேடியோக்களை மிகவும் விரும்பினார்கள். வயலில் வேலை செய்யும்போது அருகே மரக்கிளையில் தொங்கியபடியோ டவலில் வரப்பின்மீது வைக்கப்பட்டபடியோ ரேடியோ பாடிக்கொண்டிருக்கும். சேற்று மணமும் பச்சைத்தழை மணமும் கலந்து பாடல்கள் காற்றில் பரவும். பிரியத்திற்குரிய பாடகர்களின் இனிய குரல்கள் மனதை இலகுவாக்கி வேலையை எளிதாக்கின.
சிலர் தங்கள் ரேடியோக்களை தோல் உறைகளுக்குள் போட்டு போகுமிடமெங்கும் கொண்டு சென்றார்கள். பலர் அவற்றை வீட்டில் மேடையில் வைத்திருந்தார்கள். தங்கப்பனைப்போன்ற கூலித்தொழிலாளர்கள் வீட்டில் அரிசிக்கு பணமில்லாதபோதுகூட ரேடியோ பேட்டரி போட்டு தயாராக இருக்கவேண்டுமென்பதில் குறிப்பாக இருந்தார்கள். திரைப்பாடல்கள் ஒலிக்கும் ரஞ்சனி, சலச்சித்ர கானங்ஙள் போன்ற நிகழ்ச்சிகளின்போது ரேடியோவை முடிந்தவரை உரக்க ஒலிக்கவிடுவார் தங்கப்பன். என்னிடம் ஒருமுறை, அவருக்கு 'நூஸிக்' மிகவும் பிடிக்கும் என்று சொன்னார்.
சில திரைரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான பாடல்களை எழுதி கேட்டு தங்கள் பெயர் ஒலிப்பதைக் காத்திருப்பார்கள். இசையார்வம் குறைந்தவர்கள் செய்திகள் தெரிந்து கொள்வதற்காகவும் பெரிய விளையாட்டுப்போட்டிகளின் நேரடி வர்ணனை கேட்பதற்காகவும் ரேடியோவை சார்ந்திருந்தார்கள். நெடு நாட்களுக்குப் பின்னர் 1983ல் இந்தியா கிரிக்கெட் உலகப்கோப்பையை வென்றபோது அதன் நேரடி ஒலிபரப்பை நாடெங்கும் கொண்டு சென்றதும் ரேடியோதான்.
ஒரு கட்டத்தில் அப்பா சின்ன ரேடியோக்கள் மீது ஆர்வம் இழந்து மரத்தாலான பெட்டியில் அமைந்த பெரிய ரேடியோ ஒன்றை வாங்கிக் கொண்டுவந்தார். அது நல்ல துல்லியமான ஒலியை அளித்தது. ஆனால் மழைக்காலங்களில் ஒரு கிரீச் ஒலி மட்டுமே அதிலிருந்து வரும். அப்போது ஊர்களெங்கும் ரேடியோ பழுதுபார்க்கும் இடங்கள் பெருகி விட்டிருந்தன.
தபால் வழியாக ரேடியோ ரிப்பேர் படித்தவர்களுக்குகூட வேலை வாய்ப்பு இருந்தது. அப்பா மீண்டும் மீண்டும் ரேடியோவை பழுது பார்க்க எடுத்துக்கொண்டு சென்று திரும்பக் கொண்டுவருவார் ஆனால் அந்த ரேடியோவால் மழைக்கு தாக்குப்பிடிக்கவே முடியவில்லை.
அப்பா அந்த ரேடியோவை கைவிட்டுவிட்டு மீண்டும் பாக்கெட் ரேடியோவுக்கே திரும்பினார். அப்படியாக அந்த கைவிடப்பட்ட ரேடியோ என்னுடைய சொந்த ரேடியோவாக ஆகியது! அந்த ரேடியோ வெப்பமான நாட்களில் நன்றாக வேலைசெய்வதை நான் கவனித்தேன். கோடையில் சிக்கல் இல்லை. எந்த பழுதுபார்ப்பவனும் சரிசெய்யாத அந்த சிக்கலை நான் சரிசெய்ய முயன்றேன். ஸ்க்ரூ டிரைவர் உதவியுடன் ஓயாது அதை திறந்து பொருத்திக் கொண்டிருந்தேன். என்ன செய்தேன் என்று தெரியவில்லை! திடீரென்று ஒரு நாள் அது வேலைசெய்ய ஆரம்பித்தது. என் தொழில்திறனில் பெருமையுடன் கொஞ்சகாலம் அதை கேட்டு ரசித்த பின் ஒரு சிறிய ரேடியோவுக்கு ஆசைப்பட்டு அதை நான் பாபு என்ற பையனுக்கு இருபது ரூபாய்க்கு விற்றேன். அவன் என்னிடம் புகார் ஏதும் சொல்லவுமில்லை. ஆனால் சில வருடம் கழித்து அவன் தற்கொலை செய்துகொண்டான். அதில அந்த ரேடியோவின் பங்கென்ன என்று தெரியவில்லை.
இத்தாலிய விஞ்ஞானியான குக்லில்மோ மார்க்கோனி (Guglielmo Marconi 1874 - 1937) ரேடியோவை கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுகிறதென்றாலும் ரேடியோவின் உருவாக்கத்தில் கிட்டத்தட்ட நாற்பது விஞ்ஞானிகளின் பங்களிப்பு உள்ளது. என்ன வருத்தம் என்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எந்தவகையான ஊதியமோ அங்கீகாரமோ கிடைக்கவில்லை. இது ஒரு சிக்கலான பொருளியல் பிரச்சினை. பெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் விஞ்ஞானிகள் குறைவான லாபம் பெறுகையில் பிந்தி உள்ளே நுழையும் தந்திரமான வியாபாரி ஒருவன் எந்த ஆராய்ச்சியும் செய்யாமல், எதையுமே கண்டு பிடிக்காமல், பெரும் செல்வத்தை ஈட்டுகிறான்.
இன்று பொழுதுபோக்கு ஊடகங்கள் பலவாறாகப் பெருகிவிட்டிருக்கின்றன என்றபோதிலும், ரேடியோ இப்போதும் மிக அதிகமாக கவனிக்கப்படும் ஊடகமாகவே உள்ளது. குறிப்பாக இசை மற்றும் செய்திகளுக்காக. வானொலி ஒலி பரப்பு தொடங்கி நூறு வருடங்கள் தாண்டிவிட்டன என்றாலும் இன்றும் ரேடியோ தொடர்ச்சியான மாறுதல்களுக்கு ஆளாகிவருகிறது. இப்போது பண்பலை வானொலிகள் தொடர்ந்து முளைத்துக்கொண்டிருக்கின்றன. காற்றில் உள்ள பிற மின்னதிர்வுகளால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் குறுகிய தூரம் செல்லும் பண்பலை 1935லேயே எட்வின் ஆம்ஸ்டிராங் (Edwin Armstrong) என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் அதன் வெகுஜன உபயோகம் சமீப காலமாகத்தான் சூடு பிடித்திருக்கிறது. இப்போது செயற்கைக்கோள் ரேடியோ (Satellite Radio) என்ற புதிய தொழில்நுட்பம் புகழடைந்து வருகிறது. இதன் மூலம் ஒரு அதிர்வு வாங்கியின் உதவியுடன் ஒரு நிலையத்தில் உள்ள ஒலிபரப்பை மிகத்துல்லியமாக பூமியின் எந்தபகுதிக்குச் சென்றாலும் தெளிவாகக் கேட்கமுடியும்.
இந்தியாவில் 1936ல் அகில இந்திய வானொலி தொடங்கப்பட்டது. 1937ல் கேரளத்திலும் ரேடியோ ஒலிபரப்பு தொடங்கபப்ட்டது. சென்றவருடம் வரை அது அரசாங்கத்தின் ஏகபோகமாகவே இருந்தது. 2007 மலையாள மனோரமா, மாத்ருபூமி நாளிதழ்கள் பண்பலை நிலையங்களை தொடங்கின. ஏறத்தாழ 15 பண்பலை நிலையங்களுக்கு அங்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் 10 பண்பலை நிலையங்கள் உள்ளன. அலைபேசி மற்றும் கார் ஸ்டீரியோக்கள் வழியாகத்தான் இன்று ஏராளமானவர்கள் பண்பலை ரேடியோவை கேட்டு ரசிக்கிறார்கள்.
ரேடியோவின் செல்வாக்கையும் பாதிப்பையும் பற்றிய புகழ்பெற்ற பல பாடல்கள் உலக இசையில் உள்ளன. டோன்னா சம்மர் (Donna Summer) பாடிய 'On The Radio' (1985), ஆர்.இ.எம் (REM) பாடலான 'Radio Song' (1991), ஃப்ரெடி மெர்குரியின் 'Radio Ga Ga' (1984), ஜானி மிச்செல் (Joni Mitchell) பாடிய 'You Turn Me On I'm A Radio' (1972) முதலியவை மிகவும் புகழ்பெற்றவை. சமீபத்திய பாடல்களில் பான் ஜோவி (Bon Jovi) பாடிய 'Radio Saved My Life Tonight, எல்.எல்.கூல் ஜெ (LL Cool J) பாடிய ராப் பாடலான 'I Can't Live Without My Radio', புரூஸ் ஸ்பிரிங் ஸ்டீன் (Bruce Springstein) பாடிய 'Radio Nowhere' போன்றவை சட்டென்று நினைவுக்கு வருபவை. இவ்வரிசையில் மிகவும் புகழ்பெற்ற இன்னொரு பாடல் பிரட்டிஷ் இசைக்குழுவான பக்கில்ஸ் (Buggles) பாடிய 'Video Killed the Radio Star'. இந்தியில் ‘டிஸ்கோ டான்சர்’ என்ற படத்தில் வந்த 'கோயி யஹான் ஆஹ நாச்சே நாச்சே' என்ற பாடல் இப்பாடலின் நேரடித் தழுவல்.
ஃப்ரெடி மெர்க்குரி பாடிய 'ரேடியோ கா கா' எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். அதன் வரிகள் என் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை.
ரேடியோ! தனிமையில் அமர்ந்து உன் ஒளியை பார்க்கிறேன்என் பதின்பருவத்து ஒரே தோழனல்லவா நீ?கேட்க வேண்டியதையெல்லாம்நான் என் ரேடியோவில் கேட்டேன்
நாங்கள் கேட்டதெல்லாம் ரேடியோ கா கா, ரேடியோ கூ கூ ரேடியோ! இன்னும் சிலர் உன்னை நேசிக்கிறார்கள்
கண்காட்சிகளை காண்கிறோம், நட்சத்திரங்களைக் காண்கிறோம்தொலைக்காட்சிகளில் மணிக்கணக்காக!காதுகள் இங்கு தேவையே இல்லை!காலங்கள் வழியாக எப்படி மாறுகிறது இசை!
இந்தக் காட்சிகளைக் கண்டு களைக்கும்போதுநமது மிகச்சிறந்த தருணங்கள் மீண்டும் வந்துசேரக்கூடும்!ரேடியோ! இன்னும் சிலர் உன்னை நேசிக்கிறார்கள்
1970களில் எங்கள் ஊர்களில் ஒலிநாடாக்கருவிகள் வந்துசேர்ந்தன. ரேடியோவிலிருந்து டேப் ரிகார்டர்களுக்கு ஆட்கள் மாற ஆரம்பித்தார்கள். அதில் ரேடியோவும் இருந்ததனால் அவை டூ இன் ஒன் என்று அழைக்கப்பட்டன. ஆனால் போதிய மின்வசதி இல்லாத எங்கள் ஊரில் அந்த கருவி பரிதாபமாக தோல்வியடைந்தது. ஒரு ஒலிநாடா பாடி முடிவதற்குள்ளேயே பேட்டரிகள் தீர்ந்து விடும்! ஆகவே பலரும் அதை ரேடியோவாக மட்டுமே பயன்படுத்தினார்கள்.
என் அப்பா ஒரு தீவிர ரேடியோ ரசிகராகவே இருந்தார். ரேடியோவில் வரும் எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்பார். அவர் டேப் ரிகார்டர்களினால் கவரப்படவோ அதை வாங்கவோ இல்லை. அவர் மகிழ்ச்சியாகவோ வருத்தமாகவோ இருந்தால் உடனே ரேடியோவைத்தான் இயக்குவார். அப்பாவின் அம்மா இறந்த நாளை நான் நினைவுகூர்கிறேன். அப்பா உண்மையிலேயே நேசித்த ஒரே மனித ஆத்மா அவரது அம்மாதான். அவரது இறப்பு அப்பாவை உலுக்கிவிட்டது. பாட்டியின் உடலருகே அமர்ந்து சிறு குழந்தை போல நெடுநேரம் கதறி அழுதார். ஒரு கட்டத்தில் எழுந்து அறைக்குள் சென்று ரேடியோவை போட்டார். பாட்டை முழு ஒலியுடன் வைத்து விட்டு அருகே அமர்ந்து மீண்டும் அழுதார். அன்று கேட்ட ஒரு பாடலை நான் இப்போதும் நினைவுகூர்கிறேன். ‘அந்தி மயங்ஙும் நாடுகளில் அம்பிளி வானில் உயர்ந் நல்லோ . . . வேகம் போ வேகம் போ . . .’
நானும் அப்பாவும் ஒருபோதும் ஒத்துப்போனதில்லை. அவர் ஆணவம் மிக்க மனிதர். எங்களூரின் சமூகப்பிரச்சினைகளில்தான் அவருடைய முதல் ஆர்வம் இருந்தது. என் 12 வயதுக்குப்பின் நான் அவரிடம் நேருக்கு நேர் பேசுவதே குறைந்துவிட்டது. எனக்கு என் தாத்தாவிடம்தான் ஆழ்ந்த பாசம் இருந்தது. ஆனால் அப்பாவுக்கு அவருடைய அப்பாவுடன் உறவோ உரையாடலோ இருந்ததாக தெரியவில்லை. தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருப்பவரானதனால் தாத்தாவை நான் பார்த்தது குறைவு. ஆனால் அவர்தான் இளமையில் என்னை உண்மையாகவே நேசித்தவர். எனக்கு 14 வயதாக இருக்கும்போதே அவர் மறைந்தார்.
வளர வளர நான் என் அப்பாவின் மனிதத்தன்மை அற்ற செயல்களுக்கு எதிர்வினை காட்ட ஆரம்பித்தேன். என் கண்களுக்கு அவர் ஒரு சர்வாதிகாரியாகவும் குரூரமானவராகவும் தென்பட்டார். அவர் அடிக்கடி சத்தம் போட்டு சண்டையிட்டபின் எங்கள் வீட்டை மரண அமைதி சூழ்ந்திருக்கும். என் அம்மாவை அவர் அடித்து கொடுமைப்படுத்தியதற்காகவும், குழந்தைகளாகிய எங்களை சித்திரவதை செய்ததற்காகவும் குடும்பத்தை கைவிட்டு பொது காரியங்களுக்காக அலைந்ததற்காகவும் நான் அவரை வெறுத்தேன். மூத்த மகன் என்ற முறையில் அவரால் அதிகமாகவதைக்கப்பட்டவன் நானே. அவருடன் ஒரே கூரைக்குக் கீழே வாழ்வதே எனக்கு சிரமமாக இருந்தது.
வீட்டைவிட்டு வந்து என் வாழ்க்கையை நானே அமைத்துக்கொண்டு விட்ட பிறகும், வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் அப்பா ரேடியோவுடன் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். டி.வி வந்த பிறகும் கூட நெடுநாள் அவர் ரேடியோதான் கேட்டுக்கொண்டிருந்தார். காலம் செல்லச் செல்ல அவரிடம் நான் கொண்டிருந்த இறுக்கம் தளர்ந்தது. ஆனால் அவர் சற்றும் மாறவில்லை. என்னை ஒரு சல்லிப்பயலாகவே அவர் எண்ணிவந்தார். என்னுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள அவர் மறுத்தார். பல வருடங்கள் கழிந்து சென்னையில் நான் புதுவீடு வாங்கி குடிபுகுந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி நான் அவரை ஆத்மார்த்தமாக அழைத்தபோதும் அவர் மறுத்து விட்டார். எனக்கு குழந்தைகள் பிறக்காதபோது அதற்குக் காரணம் என்னுடைய பாவங்களே என்றும் எனக்கு அது வேண்டியதுதான் என்றும் சொன்னார். நான் தத்து எடுத்துக்கொண்ட குழந்தையை எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கமாக அங்கீகரிக்க மறுத்தார். அவரைப் பொறுத்தவரை அது அவரது ரத்தம் அல்ல. அவ்வளவுதான்.
சென்ற மார்ச் மாதம் 29ஆம் தேதி என் கடைசித்தம்பியின் திருமணநாள். நான் என் மகளுடன் முந்தினநாளே சென்று சேர்ந்தேன். என்னையும் என் மனைவியையும் கண்டதுமே என் அப்பா அருகே வந்து என் மகளை கையில் வாங்கி அணைத்து முத்தமிட்டார். நான் அதைக் கண்டு நெகிழ்ந்துவிட்டேன். அவர் ஒரு கொண்டாட்ட மனநிலையில் இருந்தபோதிலும் அவரது கண்கள் ஈரமாக இருந்ததுபோல் தோன்றியது. என் கண்களைச் சந்திக்காமல் டிவி பேரொலி எழுப்பிக் கொண்டிருந்த அறைக்கு அவர் சென்றுவிட்டார்.
இரண்டுவாரம் கழித்து ஒருநாள் இரவு இரண்டரை மணிக்கு எனக்கு ஓர் அழைப்பு வந்தது. அப்பா இறந்துவிட்டார். நான் எங்கள் குடும்பவீட்டின் கூடத்துக்குள் நுழையும்போது அம்மாவும் என் தங்கையும் மற்ற உறவினர்களும் கதறி அழும் ஓசை அங்கே நிறைந்திருந்தது. என் மனம் மரத்திருந்தது. அப்பாவின் உறைந்த உடல் ஒரு குளிர்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது. நான் அவரை நெருங்கி அந்த முகத்தைப் பார்த்தேன். எனக்கு பழக்கமான அந்த நிராகரிக்கும் சிரிப்பு உதடுகளில் பரவியிருக்கக் கண்டேன். ‘போடா புல்லே’ என்று சொல்வதைப்போல.
அவரது சவ அடக்கத்துக்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்து பங்கெடுத்தார்கள். கிராமமே அவருக்காக வருந்தியது. ஒரு மிகப்பெரிய இரங்கல் கூட்டம். அதில் அவரைப் புகழ்ந்து, அவர் அந்த கிராமத்துக்குச் செய்த நன்மைகளை பட்டியலிட்டு பலர் பேசினார்கள். வெளிநாட்டில் தன் வேலை இடத்துக்கு திரும்புவதற்கு முன்னர் என் தம்பி அப்பாவின் பெட்டியை உடைத்து திறந்தான். உள்ளே அதிகமாக ஒன்றும் இல்லை. பல மதிப்பில்லாத பொருட்களுடன் ஒரு பழைய பழுதடைந்த ரேடியோவும் இருந்தது.
இன்று, என் உயர்தொழில்நுட்ப இசைப்பெட்டியில், ‘உயிருடனிருக்கும் நாட்களில்’ என்ற பாடலைக் கேட்கிறேன்.
எல்லா தலைமுறையும்முந்தையதை பழி சொல்கின்றனஅந்த கசப்புகளெல்லாம்வந்து நம் கதவுகளை முட்டுகின்றன
என் அப்பா அருமையாக நினைத்த வற்றின்கைதிதான் நான் என்று அறிவேன்அவரது நம்பிக்கைகள், அச்சங்கள் ஆகியவற்றின் பிணைக்கைதி நான்
அப்பா இறந்த காலைநேரத்தில்நான் அங்கே இருக்கவில்லைஅவரிடம் சொல்லவேண்டியவற்றில் எதையும்நான் சொல்லவேயில்லை
உயிருடனிருந்த நாட்களிலேயே அவரிடம் சொல்லியிருக்கலாம்இறக்கும்போது மிகவும் தாமதமாகி விடுகிறது, ஒருநாளும் நாம் முகத்தோடுமுகம் பார்த்துக்கொள்ளவேயில்லை என்று உணர...*
புரிந்துகொள்ள முடியாத ஒரு கடும் துயரத்தால் இந்தப்பாடல் என்னை இறுக்குகிறது.
*The song, In the Living Years by the band Mike & Mechanics

சீன வானொலியின் தமிழ் சேவை


சீன வானொலி தனது தமிழ் ஒலிபரப்பினை 1963-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியில் தொடங்கி தற்போது 45-ம் ஆண்டு நிறைவினை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. நிலையத்தில் பணி புரியும் சீனர்கள் தமிழ் மொழியை முறையாக கற்று தங்களது பெயரினையும் நிகழ்ச்சிக்காக அழகான தமிழ் பெயர்களாக மாற்றிக்கொண்டு கொஞ்சும் தமிழில் நிகழ்ச்சிகளை படைத்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் அரைமணி நேரம் மட்டுமே ஒலி பரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகள் தற்போது ஒரு மணி நேரத்திற்கு ஒலி பரப்பப்படுகிறது.
தமிழர்களே தமிழை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வரும் வேளையில் எங்கோ ஒரு மூலையில் வளர்ந்து கொண்டிருப்பது சந்தோஷமான விஷயம் தானே? சீன வானொலியின் தமிழ்ப் பிரிவுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். சீன வானொலியின் செய்திகளை இணையத்தின் வழி படிக்கவும் கேட்கவும் இங்கு செல்லுங்கள்.